
டீனேஜ்ல என்ன பண்ணியிருக்கோம்னு யோசிச்சதில் நமக்கு அப்படி எக்சைட்டிங்கா ஒண்ணுமே இல்லாம போயிடுச்சு. வாழ்க்கைல எம்புட்டு மிஸ் பண்ணியிருக்கேன். ஏன் மிஸ் பண்ணினேன்னு யோசிச்சேன். நான் ரொம்ப சுமாரான மொக்கை பிகராய் இருந்ததாலும், கூட படிச்ச, பழகிய பொண்ணுங்க எல்லாரும் என்னைவிட சூப்பர் பிகராய் இருந்ததாலும், பெரும்பாலும் என் ஆண் நண்பர்கள் எனக்கு தம்பியாய் இருந்ததாலுமோ என்னவோ எனக்கு ஒரு லவ் லெட்டரும் வரலை. லொடுக்கு சுந்தரி ஸ்டெட்டஸ்தான் கிடைச்சுது. (அப்படின்னா என்னான்னு தெரியாதவங்க யாராச்சும் இருக்கீங்களா?)
ஒன்பதாவது படிக்கும்போது ப்ரின்ஸின்னு ஒரு பொண்ணு. 'நதியா மாதிரி அவளுக்கு நெத்திடி' என்று மற்ற பெண்கள் அவளை கிட்டத்தட்ட ஒரு செலிப்ரட்டி ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாங்க. (நதியா மாதிரி நெத்தி, அமலா மாதிரி மூக்கு இதெல்லாம் இருக்க பொண்ணுங்கன்னா அவங்களுக்கு கொம்பு முளைச்சிருக்கும்). ஒரு சிலர் அவளுக்கு சாக்லேட் வாங்கிக்குடுத்து பிரெண்ட் ஆக்கிக்குவாங்க. அப்பறம் ஒரு சிலர் 'ஏய் அவ கெட்ட பொண்ணுடி, அவ யாரையோ லவ் பண்ணறாளாம். காந்தி பார்க்ல ஒரு ஆட்டோ டிரைவராம். அவ கூட வச்சிக்காத' என்று சிலருக்கு அட்வைஸ் கிடைக்கும். அப்பறம் நான் கல்லூரி படிக்கும்போது அந்த ஆட்டோ டிரைவரையே அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டதும் நடந்தது.
என் ஸ்கூலுக்கு அருகிலேயே பாய்ஸ் ஸ்கூலும் உண்டு. எங்கள் ஊரிலிருந்து பசங்களும் பெண்களுமாய் ஒரு பத்து பதினைந்து பேர் ஒரே பஸ்ஸில் போவோம். அக்பர் என்று ஒரு பக்கத்து வீட்டுப்பையன். பத்தாவதில் ரெண்டு தரம் பெயிலாகி பதினொண்ணாவது கஷ்டப்பட்டு படித்துக்கொண்டிருந்தான். எங்களை ஓட்டுவதாக நினைத்துக்கொண்டு ' உங்க மிஸ் எல்லாரையும் எனக்குத்தெரியும். போட்டுக்குடுத்துருவேன்' என்பான். நாங்கெல்லாம், 'வேறொண்ணுமில்லை. இவன் கூடப்படிச்சவங்க எல்லாம் டீச்சராகிட்டாங்க, இவந்தான் இன்னும் ஸ்கூலே முடிக்காம இருக்கான்' என்று கலாய்ப்பதுண்டு. எங்க பஸ் கூட்டத்தில யாரும் யாரையும் லவ் பண்ணின மாதிரி தெரியலை. நல்ல ப்ரெண்ட்ஷிப் இருந்தது எல்லாருக்கும். காலையும் மாலையும் பஸ்ஸில் போவதே ஜாலியாய் இருக்கும்.
அப்பறம் காலேஜ் படிக்கும்போது என் தோழி கொஞ்சம் குண்டாய் பார்க்க நன்றாக இருப்பாள். அதனால் அவளுக்கு கல்லூரியில் குஷ்பூ என்று பெயர். அவள் பக்கத்தில் கொத்தவரங்காய் மாதிரி நான் ஒல்லியாய் இருப்பேன். அப்பெல்லாம் குஷ்பூ அலை. அவளுக்குதான் நிறைய விசிறிகள் கல்லூரியில். ப்ரின்ஸிக்கு இருந்த மாதிரி பெண் ரசிகைகள் அவளுக்கு குறைவு. பசங்கதான் நிறைய - For obvious reasons :).
அப்பறம் சில கிசுகிசு வரும். ரோஜர் அண்ணாவும் சுரையா அக்காவும் பிரிஞ்சிட்டாங்களாம். சுரையா அக்காவோட அப்பா முஸ்லிம் அம்மா இந்து. ஆனா சுரையா அக்கா வீட்ல எல்லாருக்கு இந்து மாப்பிள்ளை / பொண்ணுதான் கல்யாணம் பண்ணி வைக்கப்போறாங்களாம் என்று காத்துவாக்கில் சேதி வரும். ரோஜர் அண்ணாவும் ஜெண்டில்மேனாக எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லிட்டு வேற ஊருக்கு போயிட்டார். நான் அவரை அதுக்கப்பறம் பார்த்ததில்லை. அப்பறம் மாலதி அக்கா/சாதிக் அண்ணா மாதிரி சின்சியரா லவ் பண்ணறவங்களைப்பாத்து பின்னாள்ல யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கலாமேன்னு தோணும்.
என் அம்மா அப்பா எல்லாம் முல்லை ஆயா மாதிரி சந்தேகப்பட்டாங்களான்னு தெரியாது. ஆனால் நான், என் அக்கா, நண்பர்கள் எல்லாம் லவ் பெரிய கெட்ட வார்த்தை என்கிற ரேஞ்சுக்குதான் நினைத்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். நான் வேலைக்குப்போகும்போது தான் அப்பா அம்மா லவ் மேரேஜ் என்று அப்பா ஒருநாள் சொன்னார். அம்மாவின் தாய்மாமன் மகன் தான் அப்பா. அம்மா ப்ரொப்போஸ் பண்ணிதான் கல்யாணமே பண்ணிக்கிட்டாங்கன்னும் ரொம்ப லேட்டா சொன்னார். அந்தந்த வயசில தெரிஞ்சிருந்தா எவ்வளவோ சாதிச்சிருக்கலாம்.
சந்தனமுல்லை டீனேஜ் கொசுவத்தி சுத்த சொல்லீட்டாங்க. அதோட விளைவு தான் இந்தப்பதிவு. அமிர்தவர்ஷினி அம்மா, கோபிநாத், தீபா , முகிலன் ,ஆதிமூலகிருஷ்ணன், வானவில்வீதி கார்த்திக், நான் ஆதவன், கணேஷ் இன்னும் யாருக்காவது தொடர விருப்பமிருந்தால் தொடருங்கள்.




