Monday, 7 December 2009

ஏழேழு பிறவிக்கும் உற்றோமே ஆவோம்

அப்பா சத்தம்போட்டுக்கொண்டிருந்தார். "டேய், கிரிதர், உம் பைக் ப்ரேக் சரியா பிடிக்கமாட்டேங்குதாம். ஹேண்டில் பார் சரியா திரும்ப மாட்டேங்குதாம். உன் தம்பி சொன்னான். இன்னும் நீ அதை சரி பண்ணாம வைச்சிருக்கியா. நேத்து ஒரு ஆள் மேல மோதப்பாத்தானாம். இதுல ஆபீஸ்ல வேற எல்லாருக்கும் கடன் கொடுத்து வண்டிய குட்டிச்செவுராக்கறே"

" என் பைக்க என்னைக்கேக்காம அவன் ஏன் தொடணும். கேட்டுட்டு எடுக்கசொல்லுங்க" என்று பதிலுக்கு நானும் கத்திவிட்டு வந்தேன்.

போனவாரம் நானும் என் கலீக் பாலசுப்ரமணியமும் சுத்தப்போனபோது ஒரு காரில் மோதி கீழே பைக் விழுந்ததில் இருந்து கொஞ்சம் தகராறு பண்ணிக்கொண்டுதான் இருக்கிறது. மெக்கானிக்கிடம் கொடுத்தால் ரெண்டுநாள் பண்ணிவிடுகிறான். பைக் இல்லாவிட்டால் கால் ஒடிந்த மாதிரி இருக்கிறது. அதனாலேயே இன்னும் ரிப்பேருக்கு கொடுக்காமல் அட்ஜஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்.


நான் இத்தனை நாள் பவானியில் எல்.ஐ.சி யில் வேலை பார்த்துவந்தேன். இப்போது தான் மாற்றம் கிடைத்து கோவைநகரக்கிளை வந்து நான்கு மாதம் ஆகியிருக்கிறது. இனி மெஸ், ஓட்டல் சாப்பாடு இல்லை. அம்மா கைச்சமையல் சாப்பிடலாம். பேச்சிலர் பசங்க என்று அக்கம்பக்கம் பேசத்தயங்கும் வாழ்க்கை இல்லை. எல்லாத்துக்கும் மேல நான் ஆசையா வாங்கின பைக் ஓட்டிட்டு ஆபீஸ் போலாம். ட்ரான்ஸ்பர் ஆகி வந்ததில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் இதுதான்.

புதிதாய் ட்ராஸ்பர் ஆகி ஒரு ப்ராஞ்சுக்கு வருவதில் உள்ள ஒரு ப்ரச்சினை என்னவென்றால் , உள்ளதிலயே யாரும் பாக்க விரும்பாத ஒரு வேலையை நம்ம தலைல கட்டுவார்கள். எங்க ஆபீஸில் அதுதான் இந்த பாலிஸி ஆல்ட்ரேஷன். பொதுவா கல்யாணம் பண்ணினவங்க பெயர், நாமினி மாற்றும் வேலைதான் நிறைய வரும். அப்பறம் 15 வருஷ பாலிஸியை 20 வருஷமா மாற்றுவது. இது மாதிரி கடியான வேலைகள்தான் கிடைக்கும். அடுத்தது யாராவது புதுசா இந்த ப்ராஞ்ச் வரும் வரை , அவர்கள் தலையில் இந்த வேலையை கட்டும்வரை நான் செய்துதான் ஆகவேண்டும்.

"கிரிதர், இந்த பாலிஸி ஆல்ட்ரேஷன் கொஞ்சம் பாருடா" பாலசுப்ரமணியம் என்னிடம் ஒரு பாலிஸி கொடுத்துவிட்டுப்போனான்.

பாலசுப்ரமணியம் கொடுத்த பாலிஸி வேலையைக்கவனிக்க ஆரம்பித்தேன். துரைராஜ் என் டேபிளுக்கு வந்தார்.

"கிரிதர், என்னோட ரெண்டு இன்ஸூரன்ஸ் பாலிஸி நாமினேஷன் என் வைஃப் பேர்ல மாத்திதர்றீங்களா"

துரைராஜுக்கு கல்யாணமாகி ஆறு மாதம்தான் ஆகிறதாம். அவரிடம் அதிகம் பேசியதில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். சினேகமாய் சிரிப்பார். ஐந்து மணிக்கு டாண் என்று வீட்டுக்கு கிளம்பிவிடுவார். எல்லாரும் கல்யாணமாகி இன்னும் ஹனிமூன் பீரியட்ல இருக்கார். அதான் என்று கிண்டல் செய்வது வழக்கம். திருமண சான்றிதழில் அவர் மனைவி பெயர் மீரா என்று இருந்தது. அழகான பெயர். துரைராஜ் அப்பா பெயரில் இருந்து, மீரா துரைராஜ் என்று அவர் மனைவி பெயருக்கு நாமினேஷன் மாற்றி அவரிடம் கொடுத்தேன். நன்றி சொல்லி வாங்கிக்கொண்டார்.


நாளைக்கு பாலசுப்ரமணியத்துக்கு பிறந்த நாள். ஏதாவது பரிசு வாங்கவேண்டும். மதிய இடைவேளையில் சீனிவாசனை துணைக்கழைத்தேன்.

"டேய் சீனிவாசன். என் பைக் எடுத்துட்டு சிட்டிக்குள்ள ஓட்ட முடியாதுடா. இன்னும் ரிப்பேர் பண்ணவேயில்லை. உன்னோடதுல போலாமா?"

" சரி வா, என்ன வாங்கறதுன்னு யோசிச்சிட்டியா"

" இல்லை. மே பி ஏதாவது பர்ஃயூம்"

நாங்கள் திரும்பி வர ஒன்றரை மணிநேரமாகிவிட்டது. என்ன சொல்வார்களோ என்று பயந்து இரண்டு பேரும் ஆபீஸுக்குள் நுழைந்தோம். ஆபிஸில் எல்லாரும் டென்ஷனாய் இருப்பதாய் தோன்றியது. பாலசுப்ரமணியம் பதட்டத்துடன் ஓடி வந்தான்.

" எங்கடா போயிட்ட? துரைராஜ் உன் பைக்க எடுத்துட்டு போயி, தெரு முனைல ஒரு வேன்ல அடிபட்டு சீரியஸா இருக்கார் பெரியாஸ்பத்திரில. பிழைக்கறது கஷ்டம்ங்கற மாதிரிதான் சொல்றாங்க."

பைக்சாவியையும் டேபிளில் மேல் ட்ராயரில் வைத்துவிடுவேன். பைக் வேண்டும் என்பவர்கள் பொதுவாக என்னிடம் சொல்லிவிட்டுதான் சாவி எடுத்துப்போவார்கள். அன்றைக்கு செல்போனையும் மறந்து விட்டு போய் விட்டேன். துரைராஜுக்கு என்ன அவசரமோ , எடுத்துப்போயிருக்கிறார்.

மாலை சீனிவாசன் தான் வீட்டில் இறக்கிவிட்டான். அப்பா,அம்மாவிடம் நடந்ததை சொன்னேன். நன்றாக வசவு விழுந்தது.

"வண்டியை ரிப்பேர் பண்ணுன்னு எத்தனை தடவை சொல்லீயிருப்போம். இப்படி ஒருத்தர் உசிர் போக காரணமாகீட்டயேடா"

மறுநாள் ஆபிஸிலும் பாலசுப்ரமணியனும், சீனிவாசனும் திட்டினார்கள்.

"என்கிட்ட சொல்லாமல் அவர் வண்டி எடுத்துப்போக நானா காரணம்?"

" வண்டி ரிப்பேர்னு தெரியுமில்ல, ஏன் சாவியை எல்லாரும் எடுக்கறமாதிரி வைக்கிற?"

பேசிக்கொண்டிருக்கும்போதே துரைராஜ் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. நான் ஒருவிதமான குற்ற உணர்ச்சியில் அவர் இறப்புக்கு பாலசுப்ரமணியம் வற்புறுத்தியும் போகவில்லை. நான் இதுவரை துரைராஜ் மனைவியைப்பார்த்தது இல்லை. நான் இந்தக்கிளைக்கு மாற்றலாகி வரும்முன்பே அவருக்கு திருமணமாகிவிட்டதால் திருமணத்தில் பார்க்கும் வாய்ப்பும் ஏற்படவில்லை. அவன் தான் துரைராஜ் இறப்புக்கான க்ளெய்ம் எல்லாம் செட்டில் செய்ய தேவையான டாகுமேண்ட்ஸ் வாங்க அவர் வீட்டுக்கு போவான். ஒன்றரை மாதம் கழித்து, பாலசுப்ரமணியம் என்னை அவர் வீட்டுக்கு அழைத்தான்.

"துரைராஜ் டெத் க்ளெய்ம் செட்டிலாகிருக்கு. அவர் வீட்டில் மனைவியிடம் செக் கொண்டுபோய் கொடுக்கசொல்லியிருக்கிறார் மேனேஜர். நீயும் வா"

" இல்லை பாலு, எனக்கு என்னவோ மாதிரி இருக்கு, நான் வரலை"

" நீ மரியாதைக்காகவாவது துரையின் மனைவியிடம் பேசவேண்டும், அப்படியே இந்த செக்கையும் கொடுத்தமாதிரி இருக்கும் வா" என்று இழுத்துக்கொண்டு போனான்.

வீட்டு வாசலில் இறங்கியும் எனக்கு உள்ளே போக மனமில்லை.

" நான் வரலை, அவங்ககிட்ட என்ன பேசறது? என் வண்டிலபோய்தான் உங்க கணவர் இறந்தார்னு சொல்லறதா? என்கிட்ட அனுமதி கேட்டிருந்தா வண்டிய எடுக்கவிட்டிருக்கமாட்டேன்னு சொல்லறதா? இல்ல எனக்கு இதுல சம்பந்தம் இல்லைங்கற மாதிரி உள்ள வந்து நீ செக் குடுக்கறத பாக்க சொல்லறியா? என்னை ஏன்டா இப்படி ஒரு இக்கட்டான நிலைமைல தள்ளி விடறே"

எங்கள் பேச்சு சத்தம்கேட்டு கதவு திறக்கப்பட்டது.

" மீரா, இது கிரிதர், எங்கூட வேலை பார்க்கிறார்". என்ன சொல்வது என்று தெரியாமல் மீராவின் முகத்தைப்பார்த்தேன்.



நான் என் வருங்கால மனைவியை முதன்முதலில் சந்தித்தது அப்போதுதான்.

.

Friday, 27 November 2009

என்னமோ நடக்குது

சர்வேசன் சிறுகதைப்போட்டி ஒண்ணு நடத்த , நம்மளும் சும்மா இருக்காம திருப்பம் என்ற பெயரில் ஒரு கதை எழுதி அது முதல் இருபதுக்குள்ள இடம் பிடிச்சிருக்கு. எழுத முயற்சி செய்யறேன். இப்பத்தான் ஒரு கோர்வையா வர்ற மாதிரி தோணுது.


அந்த திருப்பத்தை வந்தடைய வேண்டிய மற்ற உபகரணங்கள் முந்தைய பத்திகளில் இல்லாதது, கதைக்கு வலு சேர்க்காமல் போனமாதிரி இருக்குதுன்னு சர்வேசன் அட்வைஸ் பண்ணியிருக்கார். அடுத்த கதைல அந்த பாயிண்ட் கவனிச்சுக்கறேன்.

கொஞ்சம் அதிகமா அதைப்பத்தி சொன்னா நச் Effect குறைவாயிடுமோன்னு நினைச்சு தான் லேசா சொல்லீட்டு விட்டு விட்டேன். கதையின் நாயகர்கள் ரெண்டுபேரும் அதிகம் பேசிக்கற மாதிரி வசனம் இருந்தால் படிக்கறவங்க முடிவை யூகிக்கும் அபாயம் இருந்தது. சொர்ணத்தை இன்னும் வாயாடியாய் எழுதலாம்னு நினைத்தேன். யாராவது மாதர் சங்கத்துல இருந்து வந்து பெண்டு நிமித்திட்டா என்ன பண்ணறதுன்னு அடக்கியே வாசிச்சிட்டேன்.

கதை பிடிச்சிருந்தா ஓட்டு போட இங்க போங்க. போட்டவங்க போடப்போறவங்க எல்லாருக்கும் டாங்கீஸ். :)

Tuesday, 24 November 2009

வாழ்க்கைக்கல்வி

மதிய நேரம் சாப்பிட்டு முடித்துவிட்டு நான், பானுமதி, ஹேமா,ரோஸி எல்லாரும் அலுவலகத்துக்கு அருகே இருந்த பேன்சி ஸ்டோர் போய் ஸ்டிக்கர் பொட்டு வாங்கிக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் ஆபீஸ் சப்ஸ்டாப்(Substaff) ஓடி வந்தார்.

"அகிலா மேடம் , பொண்ணுங்க எல்லாம் இங்க தான் இருப்பீங்கன்னு குமார் சொன்னார். சரியாத்தான் இருக்கு. பர்னார்ட் சார் உங்களைக்கூப்பிடறார். அந்த முருகேசன்னு பாலிசி க்ளோஸ் பண்ணக்கேட்ட ஆள் மறுபடியும் வந்திருக்கார். நீங்க தான் மறுபடியும் பேசி பாலிஸி க்ளோஸ் பண்ணவேண்டாம்னு சொல்லணுமாம்"

குமார் உன்னை கவனிச்சுக்கறேன். ஏன் என்னை இப்படி பர்னார்ட் சாரிடம் மாட்டி விடற என்று மனசுக்குள் திட்டிக்கொண்டு ஆபீஸுக்கு திரும்பினேன். நான் எல்.ஐ.சியில் வேலை பார்க்கிறேன். போட்டித்தேர்வுகள் எழுதி வேலையில் சேர்ந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. நான், பானுமதி, ஹேமா, பாலசுப்ரமணியம், குமார், உமா மகேஸ்வரி, ப்ரியா எல்லாரும் ஒரே பேட்சில் தேர்ந்தெடுக்கப்பட்டோம். மதியம் உணவு முடிந்ததும் பெண்கள் எல்லாம் இப்படி எங்காவது ஷாப்பிங் போனால் பையன்கள் எல்லாம் தம்முக்கு வெளியே போய்விடுவார்கள்.

பர்னார்ட் சார் என் மேலதிகாரி. இந்த முருகேசன் போனவாரம் வந்தபோது என்னைப்பாத்து இந்த மாதிரி எனக்கு ஒரு பொண்ணு இருக்குன்னு சொல்லியிருக்கிறார். அதனால் பர்னார்ட் சார் என்னை தனியாகக்கூப்பிட்டார்.

" பாருங்க மேடம், நீங்க பேசினா கேட்டுக்குவார்னு செண்டிமெண்டலா எனக்குத்தோணுது. ஏதோ கடன் தொல்லையாம். பணம் வேணும்னு வந்து நிக்கிறாரு. அவர் பேமிலி சிச்சுவேஷன் கேளுங்க. இப்ப பாலிஸி க்ளோஸ் பண்ணினா எவ்வளவு நஷ்டம்னு எடுத்து சொல்லுங்க".

எனக்கு எரிச்சல்தான் வந்தது. மேலதிகாரி என்று சம்பளம் வாங்கிக்கொண்டு இந்த சூழ்நிலைகளில் என்னை ஏன் மாட்டிவிடவேண்டும். இருந்தாலும் மேலதிகாரி சொன்னதை தட்டி பழக்கமில்லாததால் தலையாட்டிவிட்டு அந்த முருகேசனிடம் பேசினேன்.

"இப்படி உக்காருங்க, உங்க பேரு முருகேசனுங்களா"

"ஆமாம்மா"

"பாலிசி க்ளோஸ் பண்ணணும்னு சொன்னீங்களாமா, ரெண்டு லட்சம் இருபது வருசத்துக்கு பாலிசி எடுத்துட்டு பத்து வருசத்துலயே க்ளோஸ் பண்ணினா ஐம்பதாயிரத்துக்கு பக்கம்தான் கிடைக்கும்"

" அந்த ஆபீசர் சொன்னாரு கண்ணு, லோன் எடுத்துக்க சொன்னாரு. உங்கிட்ட சொல்லறதுக்கு என்ன. எம்பொண்ணுமாதிரி இருக்கற. என்னோட ஆட்டோ ஓட்டிப்பிழைக்கற வேலைல, பையனையும் பொண்ணையும் படிக்க வைக்கறேன். கடன் தலைக்குமேல இருக்கு. கொஞ்சத்தையாவது அடைக்காட்டி இனியும் என்னை நம்பி யாரும் கடன் தர மாட்டாங்க. இதுல லோன் எடுத்தா திருப்பி எப்படி கட்டறது?"

"என்ன படிக்கறாங்க பொண்ணும் பையனும்"

"பையன் பிகாம் கடைசி வருஷம், பொண்ணு ப்ளஸ் டூ"

"நல்லா யோசிங்க. இந்தாங்க இதுதான் க்ளெய்ம் பார்ம். வீட்டுக்கு எடுத்துட்டு போங்க. எல்லார் கிட்டயும் பேசுங்க. அப்பறமும் தோணிச்சுன்னா பார்ம் எழுதி கையெழுத்து போட்டுட்டு வாங்க. லோன் பார்மும் எடுத்துட்டுப்போங்க. நல்லா யோசிச்சு முடிவு பண்ணீட்டு ரெண்டு நாள் கழிச்சு வாங்க" இப்படி சொல்லி அவரை அனுப்பி வைத்து விட்டேன். இப்பொழுது மறுபடியும் பர்னார்ட் சார் முருகேசனிடம் பேச சொல்லியிருக்கிறார்.

பர்னார்ட் சாரிடம் போனேன்.

" ஏன் சார் , அவர் க்ளோஸ் பண்ணறதுன்னா பண்ணீட்டு போகட்டும். நம்ம என்ன கவுன்சிலிங் செண்டரா நடத்தறோம். பாலிஸியை பாதில முடிச்சா இவ்வளோ நஷ்டம் அவ்வளோ விளைவுன்னு சொல்லிட்டு இருக்க. அவர் ப்ரீமியம் கூட இப்ப கட்ட முடியாத நிலைமைன்னு சொல்றார்."

" அப்படி இல்லம்மா. அவர் எடுத்து இருக்க பாலிஸி பீமா கிரண். ப்ரீமியம் கம்மி. இப்படி பாதில வேணும்னா கட்டின ப்ரீமியத்துல கொஞ்சம்தான் கிடைக்கும். ஆனா டெத் பெனிபிட் உண்டு. ஆக்ஸிடெண்ட் ஆனா டபுள் தி சம் அஷ்யூர்ட் கிடைக்கும். எல்.ஐ.சில வேலை செய்யறதை வெறும் வேலையா நினைக்கக்கூடாது உங்களை மாதிரி சின்னப்பொண்ணுங்க. ஒரு சேவையா நினைக்கணும்".

" இனிமேல் இந்த மாதிரி கேஸ் வந்தா எங்கிட்ட அனுப்பாதீங்க சார். இந்த ஒருதடவை மட்டும் பேசி அனுப்புகிறேன். என் வேலையே எனக்கு தலைக்கு மேல இருக்கு " என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ரு மாதம் இருக்கும் இது நடந்து. ஒருநாள் ஒரு அம்மா, அவர்கள் மகன் மகளோடு என் முன்னால் வந்து நின்றார்கள். பர்னார்ட் சார் வந்து, "முருகேசன்னு ஒருத்தர் பாலிசி பாதில முடிச்சுக்குடுக்க சொல்லி வந்தாரே. அவரோட குடும்பம். அவர் விபத்துல இறந்து போயிட்டார். பாலிஸி பணம் வாங்க வந்தவங்க உங்களையும் பாக்கணும்னு கேட்டாங்க. அதான் " என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் எழுந்து நின்றேன்.

"எம்பேர் சரவணன்ங்க, கொஞ்ச நாள் முன்னாடி எங்கப்பா வந்தப்போ நீங்கதான் பாலிஸியை பாதில க்ளோஸ் பண்ணவேண்டாம்னு சொன்னீங்களாம். ஐம்பதாயிரம் போல தான் பணம் கிடைச்சிருந்திருக்கும். அப்பா ஆக்ஸிடெண்ட்ல செத்ததுனால நாலு லட்சம் கிடைச்சிருக்குங்க. செக் வாங்கிட்டு போக வந்தோம். அப்பாவுக்கு கொஞ்சம் குடிப்பழக்கம் உண்டுங்க. அதனாலதான் கடன். அன்னைக்கு அப்பா அந்தப்பணம் வாங்கிட்டு வந்திருந்தார்னா பாதி குடிச்சே தீர்த்திருப்பார். இன்னும் ஆறு மாசத்தில நான் டிகிரி முடிச்சு ஏதாவது வேலை தேடிக்குவேன். இந்தப்பணம் எங்களுக்கு பெரிய உதவியாயிருக்கும். உங்களுக்கு நன்றி சொல்லிட்டுப்போகத்தான் வந்தோம்."


நான் பர்னார்ட் சாரைத்தேடிப்போய்க்கொண்டிருந்தேன் நன்றி சொல்ல.



*******************

இக்கதையில் வந்துள்ள பெயர் உள்ளவர்கள் இன்றும் கோவை கோட்டம் - ஆயுள் காப்பீட்டுக்கழகத்தில் வேலை செய்கிறார்கள். ராஜினாமா செய்துவிட்ட என்னைத்தவிர.

Thursday, 19 November 2009

கொஞ்சம் இடம் குடுத்தா போதும். தலைக்கு மேல ஏறிக்கறது!!

" கொஞ்சம் இடம் குடுத்தா போதும். தலைக்கு மேல ஏறிக்குவயே"

இந்த வசனத்த வாழ்க்கைல யாராவது பேசக்கேட்டிருப்போம். இந்த வீடியோல பாருங்க. வேகமா போன ஒரு காரோட்டிக்கு டிக்கெட் குடுக்கப்போன போலீஸ்காரரோட நிலைமையை - ஒரு பூனைக்குட்டி போலீஸ் ஆபிஸரோட தலைல ஏறிக்கறதை. விரட்டினாலும் போகாம காலை சுத்தி வர்ரதை. டெக்ஸஸ்ல நடந்தது டீவீல காட்டீட்டே இருக்காங்க இங்க.



***************************************************

சர்வேசனோட நச்னு ஒரு சிறுகதைப்போட்டிக்கு நான் எழுதியிருந்த கதையைப்படிச்சிட்டு செல்வன் படிச்சிருக்கீங்களான்னு சென்ஷி கேட்டு சுட்டி அனுப்பிருந்தார். படிச்சிட்டு இருக்கேன். தலை அப்பவே சும்மா பின்னி படல் எடுத்துருக்கார். நீங்களும் படிங்க செல்வனை. நன்றி சென்ஷி.

***************************************************

பப்புவுக்கு சாக்லெட் குடுக்காம ஏமாத்திட்டு 'கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்' னு ஆச்சி கவஜ எழுதினா நாம சும்மா இருப்பமா. அவங்களுக்கு பின்னூட்டத்திலயே எதிர் கவுஜ எழுதியாச்சு. சும்மா இதிலயும் போட்டு வச்சுக்கறேன்.

"ஒருநாளைக்கு ஒரு பதிவுதான் படிக்கணும்,
நிறைய இடுகைகள் படிச்சா காலையிலே
எழுந்திருக்கும்போது
தலைய பிச்சுகிட்டு முடி கொட்டிடும்” என்றதை நம்பி
நீ
தமிழ்மணத்தில் படிக்காமல் விட்டுவந்த
அந்த கற்றை இடுகைகள்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்!


.

Monday, 16 November 2009

நல்லதொரு பூவாசம் நானறிந்த வேளையில் நந்தவனம் போனதெங்கே

1. இப்பல்லாம் அடிக்கடி இந்த ரெண்டு பாட்டும்தான் நம்ம வீட்ல ஓடிட்டு இருக்கு. கண்டேன் காதலை படம் பாத்தேன். நல்லாத்தான் இருக்கு. இந்தி பாக்காததினால அப்படியொண்ணும் மோசம்னு தோணலை. என்ன பரத் கதாநாயகனா இல்லாம வேற யாராச்சும் இருந்திருக்கலாம். மராத்திய பாடகர் சுரேஷ் வாட்கர் பாடியிருக்கும் நான் மொழி அறிந்தேன் கஜல் வகைப்பாட்டு. கேட்க இதம். அதிலிருந்து ஒரு வரி இடுகையின் தலைப்பாகிவிட்டது. உதித் நாராயண் தமிழ் பாட்டு உச்சரிப்புக்கு இவர்கிட்ட ஏதாச்சும் ட்யூஷன் கத்துகிட்டு வரலாம். நீங்களும் கண்மூடி கேட்டு மகிழ இதோ





2. இரண்டாவது ஆயிரத்தில் ஒருவன் பாட்டு. தாய் தின்ற மண்ணே. பிடிச்சது பிடிக்காததுலயே சொல்லியிருந்தேன் இந்த பாட்டு நல்லா இருக்குன்னு. எப்பவும் யேசுதாஸ் பாணியில் பாடாத விஜய் யேசுதாஸ், இது கர்நாடக சங்கீதம் அடிப்படையில் இருப்பதால் அப்பாவின் பாணியிலேயே பாடியிருக்கிறார் போலிருக்கிறது.

பாட்டின் இரண்டாவது பகுதி யேசுதாஸ்-சித்ரா பாடின மணிசித்ரதாழு பாட்டை ஞாபகப்படுத்துகிறது. முதல்ல சோகம் அப்புறம் சிருங்காரம்னு ஒருமுறை வந்து பார்த்தாயா பாடலையே ஞாபகப்படுத்துகிறது. அந்த பாட்டில் ஷோபனாவின் எக்ஸ்ப்ரஷன்ஸ் - ஒருமுறை வந்து பார்த்தாயா என்று ஒரு ஏக்கப்பார்வை ஸ்ரீதர் மேல் வீசுவதாகட்டும், என்மனம் நீ அறிந்தாயோ என்று கைதட்டி தாடையில் வைத்துக்கொள்வதாகட்டும். சான்ஸே இல்லை. ரீமேக் படங்களில் யாரும் கிட்டகூட நெருங்கமுடியவில்லை.

அங்கன மா மௌலிமணி
திங்களாஸ்யே சாருஷீலே
நாகவல்லி மனோன்மணி
ராமநாதன் தேடும் பாலே

மேலே இருக்கும் மலையாள வரிகளுக்கும் தாய் தின்ற மண்ணேவில்

ஈ மோகம் பரமசுகம்
நாசோகம் ராசரிதம்

மெட்டுக்களில் உள்ள ஒற்றுமையைக்கேளுங்கள்.









.

Thursday, 5 November 2009

பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன!!!

பிடிச்சது பிடிக்காதது - தொடர் பதிவு விளையாட்டுக்கு தீபாவும், முத்துலக்ஷ்மி அக்காவும் அழைத்திருக்கிறார்கள்.


1. அரசியல் தலைவர்

பிடித்தவர்: தமிழ்நாட்டுல இல்ல. முன்னாள் நியூஸிப்பிரதமர் ஹெலன் க்ளார்க்.
தேர்தல்ல தோத்ததும் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா பண்ணி Dignity யோட பதவி விலகினாங்க. அரசியல் தலைவர்கள் ஓய்வு பெறுவது ஏனோ நம்ம ஊர்ல சாதாரணமா நடக்கறதேயில்லை.

பிடிக்காதவர்: ஜெயலலிதா மற்றும் நிறைய பேர்

2. எழுத்தாளர்
பிடித்தவர்: கரையோரமுதலைகள், பயணிகள் கவனிக்கவும், கண்ணாடி கோபுரங்கள், பந்தயப்புறா எழுதின பாலகுமாரன் , சுஜாதா.
பிடிக்காதவர்: இப்ப ஆன்மிகம் கலந்து எழுத்துக்களை தொலைத்த பாலகுமாரன்.

3. கவிஞர்:
பிடித்தவர்: பாரதியார், வைரமுத்து.

ஆயிரத்தில் ஒருவன் பாட்டு கேட்டேன்.
புலிக்கொடி பொறித்த சோழமாந்தர்கள் எலிக்கறி பொறிப்பதுவோ
காற்றைக்குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பதுவோ
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ
வரிகள் எழுதிய கவிஞருக்கு பாராட்டுக்கள்.

ஈழமக்கள் தங்கள் இன்றைய நிலைக்கு பெம்மானே பாடலை எடுத்துக்கொண்டுள்ளார்கள் பாருங்கள்.


பிடிக்காதவர்: மோசமான பாடல் எழுதும் எந்தக்கவிஞனும்.

4. இயக்குனர்:
பிடித்தவர்: முள்ளும் மலரும் இயக்கியவர்
பிடிக்காதவர்: பேரரசு

5. நடிகர்:
பிடித்தவர்: சூர்யா,( ஆதவன் இன்னும் பார்க்கவில்லை) , ரஜினி
பிடிக்காதவர்: எஸ்.ஜே. சூர்யா.

6. நடிகை:
பிடித்தவர்: ஸ்ரீதேவி, நதியா, அசின்
பிடிக்காதவர்: நமீதா

7 . இசையமைப்பாளர்:
பிடித்தவர்: இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர்
பிடிக்காதவர்: எல்லார் இசையிலும் ஏதாவது ஒரு பாடல் பிடித்திருக்கிறது.

8. பாடகர்:
பிடித்தவர்: விஜய் யேசுதாஸ் (தாய் தின்ற மண்ணை பாட்டுக்காக), கார்த்திக் (எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு - படம் -சதுரங்கம்)

பிடிக்காதவர்: உதித் நாராயண் தமிழைக்கொலை செய்வதற்காக.

9. பாடகி:
பிடித்தவர்: ஜானகி, சொர்ணலதா, சுனந்தா, ஜென்சி, நித்யஸ்ரீ.
தாய் தின்ற மண்ணே பாட்டில் "நா சரசம் அப்சரசம், நா நடனம் ரசபரிதம்" என்று சிருங்கார ரசம் சொட்ட பாடியிருக்கிறார் நித்யஸ்ரீ ,விஜய் ஜேசுதாஸுடன். "சலசலசலசல ரெட்டைக்கிளவி" என்று அதிரடியாய் மட்டும்தான் பாடுவார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

பிடிக்காதவர்: அப்படி யாரும் இல்லை.

10. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த்.

பிடிக்காதவர்: என்று இல்லை. எல்லாரையும் பிடிக்கும்.


தொடர அழைப்பவர்கள்

அமிர்தவர்ஷினி அம்மா

சுசி

விக்னேஷ்வரி

Friday, 30 October 2009

அதையெல்லாம் விட்டு கொஞ்ச நாளாச்சு!!!!

அமித்து அம்மா அழைப்பின் பேரில்

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

தீபாவளின்னாலே பட்டாசு, இனிப்பு, புத்தாடைன்னு நினைச்சு சந்தோஷப்படும் சராசரிப்பெண்.

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

1999-ல் திருமணமாகி நியூசிலாந்தில் இருந்தேன். இந்தியாவில் இருந்திருந்தால் தலை தீபாவளி வேறு மாதிரி இருக்கும். இங்கே நண்பர்கள் மட்டும்தான். எங்களைப்போலவே அந்த வருடம் திருமணமாகி இருந்த இன்னும் இரண்டு ஜோடிகள் , இன்னும் சில நண்பர்கள் மொத்தம் ஒரு இருபது பேர் வெலிங்டனில் இருந்து ஒன்றரை மணி நேரப்பிரயாணத்தில் ஒரு காட்டேஜ் எடுத்து தங்கி கொண்டாடினோம். பின்னர் அது ஒரு ஐந்து வருடம் தொடர்ந்தது. கொஞ்சம் சப்பாத்தி , புளிசாதம் போன்றவைகள் எடுத்துச்செல்வோம். அங்கே பெரும்பாலும் சமையல் ரங்க்ஸ்கள்தான். பெருந்தன்மையாய் பெண்களுக்கு சமையலைறக்கு லீவு கொடுத்துவிடுவார்கள் அந்த இரண்டு நாட்கள் மட்டும். சாதம் வைக்கும் அளவெல்லாம் சரியாகத்தெரியாவிட்டால் மட்டுமே பெண்களை உள்ளே விடுவார்கள். (ரங்கமணிகளோட அம்மாக்கள் பாத்தா எங்களுக்கெல்லாம் பிடி சாபம்தான் என்று பேசி நாங்கள் சிரித்துக்கொள்வதுண்டு). பட்டாசேல்லாம் வெடிக்க அனுமதி இல்லை. இனிப்புகள் சாப்பிட்டு பாட்டுக்குப்பாட்டு போன்ற இண்டோர் கேம்ஸும் பறக்கும் நரி(Flying Fox) போன்ற அவுட்டோர் கேம்ஸும் விளையாடி கொண்டாடினோம்.

3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

இந்த வருட தீபாவளி ஆஸ்திரேலியாவில்.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

1999ல் இந்தியாவை விட்டு வந்த பின் இது பதினோராவது தீபாவளி. இங்கேயெல்லாம் வந்தபின் வார இறுதியில் தீபாவளி கொண்டாட ஆரம்பித்தோம். இப்போதெல்லாம் நியூஸி , ஆஸியில் நகர கவுன்சில்களே அவர்கள் காசு செலவழித்து தீபாவளிக்கு பட்டாசு பெரிய அளவில் வெடித்து வாணவேடிக்கை காட்டுகிறார்கள். நியூஸிலாந்தில் ஆட்களே கம்மி. வெலிங்டன் என்றால் ஒரே ஒரு தீபாவளி கொண்டாட்டம்தான். ஆஸியில் வடக்கிந்தியர்கள் தனியாக ஒருமுறை கொண்டாடிவிடுகிறார்கள். மெல்பர்னின் வடக்கு, தெற்கு இப்படி ஒவ்வொரு பகுதியினரும் தனித்தனியாக கொண்டாடுகிறார்கள். தீபாவளியன்று இங்கே உள்ள கோவிலில் பெரிய அளவில் இரவு எட்டரை மணிக்கு வாணவேடிக்கை நடத்தினார்கள். கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் காரை நிறுத்திவிட்டு போய்வரவேண்டி இருந்தது. அவ்வளவு கூட்டம் இந்த வருடம் தீபாவளி விடுமுறைநாளன்று வந்ததால். கீழே இருக்கும் காணொளிதான் நாங்கள் பார்த்த கண்கொள்ளா வாணவேடிக்கை. நீங்களும் பார்த்து மகிழ.



நகரத்தின் நடுவே நடந்த கொண்டாட்டத்தின் ஒருபகுதியை காண இங்கே செல்லுங்கள். தங்கக்கொலுசல்லே குருகுக்குயிலல்லே பாட்டுக்கு நடனம் பாருங்கள்.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
தீபாவளிக்கு புத்தாடை வாங்கவில்லை. பட்டாசும் வெடிக்கவில்லை.

6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

வீட்டில் எதுவும் செய்யவில்லை. கல்கத்தா ஸ்வீட்ஸ் விற்கும் கடையில் சம் சம் என்ற இனிப்புகள் மட்டும் வாங்கி சாப்பிட்டோம்.

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

இந்தியாவில் இருந்தவரை பெரும்பாலும் தொலைபேசி, வாழ்த்து அட்டை மூலம். இப்போது பெரும்பாலும் மின்னஞ்சல்தான்.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

திருமணத்துக்கு முன்பு இருந்த தீபாவளி எல்லாம் பட்டாசு, புத்தாடை , இனிப்புகள் இப்படித்தான். தீபாவளி அன்று காலையில் எழுந்து பட்டாசு வெடித்து குளித்து கோயிலுக்குப்போய், அக்கம்பக்கம் இனிப்புகள் குடுத்து, நண்பர்கள் வருவதும், நாங்கள் அவர்கள் வீட்டுக்கு போவதும் இப்படிக்கழியும். இரண்டு வீடு தள்ளி மாலைமுரசு மேலாளர் வீடு . ஆயிரம்வலா சரவெடி வைப்பார்கள். போய்ப்பார்ப்பது வாடிக்கை. ஏதாவது நல்ல நிகழ்ச்சி இருந்தால் மட்டுமே அதைப்பார்ப்போம். தீபாவளிக்கு பதினைந்து நாட்கள் முன்பே புத்தாடைகள் வாங்கியதை தோழிகளுக்கு காட்டுவதும் அவர்கள் வாங்கியதை எனக்கு காட்டுவதுமாய் உற்சாகம் தொடங்கிவிடும். இந்த வருஷம் புடவையா சுடிதாரா , என்ன கலர் இப்படி . இதில் பையன்கள் தான் பாவம். பெரும்பாலும் வெளுத்த கலரில் சட்டையும் பேண்டும்தான் பெரும்பாலும். ஏதோ ஜீன்ஸும் டீசர்டும் வந்ததோ தப்பித்தார்கள். :)

9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

உதவி என்றால் நாள் கிழமை பார்த்து செய்வதில்லை. முடிந்தபோது செய்வது வழக்கம். இதில் அமித்து அம்மா பதிலே நானும்.

10) நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

பெரும்பாலும் எல்லாரும் எழுதிவிட்டார்கள். ஆயில்யன், கோபி போன்ற தம்பிகள் பேச்சிலர்கள் அவர்கள் தீபாவளியைப்பற்றி எழுதலாம் விருப்பமிருந்தால். வேறு யாருக்கு விருப்பமிருந்தாலும் தொடருங்கள்.

இந்தப்பதினொரு வருட வெளிநாட்டுவாழ்க்கையில் ஒருமுறை கூட தீபாவளிக்கு இந்தியா போகமுடிந்ததில்லை. பெரும்பாலும் வேலையில் விடுமுறை கிடைக்காததும் வருடக்கடைசியில் பீக் சீசன் என்று விமான டிக்கெட் விலை ஏறிவிடுவதும் இந்தியாவுக்கு அந்த நேரத்தில் போகமுடியாததற்கு காரணங்களாகி விடும். அடுத்தவருடமாவது தீபாவளிக்கு ஊருக்குப்போகவேண்டும்.

தலைப்பு ஏன் அப்படி வைச்சேன்னு பாக்கறீங்களா. தீபாவளியா - அதையெல்லாம் கொண்டாடுவதை விட்டு கொஞ்ச நாளாச்சு. 1996ல் அம்மா உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையானபோது வெடிவைப்பது நின்றுபோனது. வெறும் கம்பிமத்தாப்பு, புஸ்வாணம், சங்குசக்கரம்தான் பட்டாசு என்று ஆகிப்போனது. பின் இரண்டு வருடங்கள் கழித்தே ஆட்டம்பாம் வெடி வாங்கியதாக ஞாபகம். மேலும் வெளிநாட்டு வாழ்க்கையில் தீபாவளியையும் தொலைத்தாயிற்று. என் போலந்துநாட்டைச்சேர்ந்த தோழி வருடாவருடம் கிருஸ்துமஸின் போது சொல்வாள் I miss that White Christmas என்று. இங்கெல்லாம் டிசம்பரில் சம்மர் தொடங்கிவிடும். பனிக்கு எங்கே போவது. எல்லாருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை தொலைப்பது வாடிக்கைதானோ!!!!!